Wednesday, 26 September 2012

இனிய பயணம்....


நான் கடந்த வாரம் என் நண்பனை பார்க்க திருச்சூர் சென்றேன். நண்பன் சிங்கப்பூர் இல் வேலை செய்துகொண்டு இருக்கிறான். அவன் என்னுடைய கல்லூரி அறை நண்பன். தற்போது ஓணம் விடுமுறைக்காக திருச்சூர் வந்து இருக்கிறான். அவன் இங்கு வந்தது இருந்து அழைத்து கொண்டிருக்கிறான். ஆனால் நான் தற்போதுதான் விடுமுறை எடுத்துகொண்டு என்னுடைய ஊருக்கு சென்று வந்தேன் ஆகவே மீண்டும் விடுமுறை தரமாட்டார்கள் என்பதால் போகமுடியவில்லை. அவன் ஞாயிறு ஒருநாள் வந்துவிட்டு போய்விடு என்று அழைத்தான். ஆனாலும் போகமுடியவில்லை. இப்படியே இரண்டு வாரங்கள் ஓடியது. இந்தவாரம் கண்டிப்பாக போகவேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். அதன்படியே  அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்துவிட்டு கோவை பஸ் ஏறினேன். அப்படியே அவனை பற்றிய நினைவுகள் என்னை தொடர்ந்தது.
கல்லூரி படிக்கும் பொது அவன் நான் மற்றும் கண்ணன் ஆகிய மூன்று பேரும் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தோம். அது இரண்டு வீடு சேர்ந்த மிகவும் அழகான வீடு. கிழே நாங்கள் குடிருந்தோம் மேலே மொட்டை மாடி. பக்கத்தில் மற்றதொரு வீடு அந்த வீட்டில் இரண்டு மலையாள நண்பர்கள் தங்கி இருந்தார்கள். அதற்கு பக்கத்தில் வீட்டின் உரிமையாளர்  தங்கி இருந்தார் அவர் வீட்டின் மேலேயும் இரண்டு நண்பர்கள் தங்கி இருந்தார்கள். வீட்டை சுற்றிலும் அழகான மாமரங்களும் தென்னைமரங்களும் நிரம்பி இருந்தது. எப்போதும் குளிர்ந்த காற்று வீசும். அப்போது எங்களுக்கு அரைநாள் தான் கல்லூரி என்பதால் மதியம் உணவை முடித்து விட்டு நன்றாக உறங்குவோம். நான் அதிகமாக தூங்கியது அந்த  காலகட்டத்தில் தான். தற்போது இந்த திருப்பூர் வாழ்கையில் அதை போன்றதொரு தூக்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாது. அது ஒரு அழகான தூங்கிய காலம்(?). மாலை எழுந்து ஒரு குளியல் போடுவோம். நல்ல தண்ணீர் எப்போதும் வரும். நான் தற்போது இரண்டு குட தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்திருப்பது வேறுவிஷயம். குளித்து முடித்துவிட்டு மொட்டைமாடியில் அமர்ந்து பேசுவோம். கண்ணன் வைகோ ஆதரவாளர் என்பதால் நானும் அவனும் அரசியல் பற்றி அதிகம் பேசுவோம். நாங்கள் மூன்று பேரும் ஓரளவுக்கு நான்றாக படிப்போம்.காலை கல்லூரி மதியம் உறக்கம் மாலை பேச்சு.இப்படித்தான் மூன்று  ஆண்டுகள் கழிந்தன. அப்போது எல்லாம் என்னுடைய கனவு படிப்பை நன்றாக முடித்துவிட்டு நல்ல வேலையில் சேர்ந்து சராசரி வாழ்க்கையை வாழ்வதற்கு ஏற்ற பொருளை ஈட்டிவிட்டு கிராமத்தில் போய் செட்டில் ஆகவேண்டும் என்று இருந்தது. அது இன்னும் நீரைவேறவில்லை என்பது வேறுவிஷயம்.
அதற்குள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் வந்து விட்டது. அங்கு இருந்து பாலகாடு செல்லவேண்டும் என்றால் உக்கடம் பேருந்து நிலையம் செல்லவேண்டும். ஆகவே உக்கடம் பேருந்து நிலையம் சென்றேன் அங்கு பாலகாடு பேருந்து நிற்கும் மார்கத்துக்கு போனால் பெரிய வரிசையில் மக்கள் நின்றார்கள். ஒவ்வொறு பேருந்தாக வந்து மக்களை ஏற்றிக்கொண்டு சென்றது. மக்களும் பொறுமையாக நின்று ஏறினார்கள். என்னுடைய முறைவந்ததும் நானும் பஸ்சில் ஏறி அமர்ந்தேன். பஸ் முழுவதுவதும் மலையாள மக்கள் இருந்தார்கள். ஆகவே எனக்கு சிறிது பயம் இருந்தது காரணம் தற்போது தான் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டம் நடந்து ஓய்ந்து இருந்தது. ஆகவே தான் இந்த பயம். ஒருசில தமிழர்கள் பஸ்சில் இருந்தால் கொஞ்சம் தைரியம் வந்தது. பஸ் புறபட்டது பேருந்தின் நடத்துனர் மிகவும் அமைதியான சுவாபம் உள்ளவராய் இருந்தார். எல்லோரிடமும் சிரித்த முகத்தோடு டிக்கெட் வழங்கினார். அவரை பார்க்கும்போது  இங்கே நகர பேருந்தில் எப்பொதும் கத்திக்கொண்டு இருக்கும் நடத்துனர்கள் நினைவுக்கு வந்தார்கள். கேரளா எல்லையில் நுழைந்ததும் அதுவரை நான்றாக அடித்து கொண்டு இருந்த வெயில் திடிரென்று நின்று மிதமான குளிர் காற்று வீசியது. அது மிகவும் அற்புதமாக இருந்தது. எங்கே பார்த்தாலும் நல்ல பச்சையான மரங்களும் அடர்த்தியான கொடிகளும் இருந்தது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பச்சை பச்சைதான். நேற்று இரவு நல்ல மழை பெய்து இருக்க வேண்டும். சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததை காண முடிந்தது. பாலகாடு வரை பசுமையாக இருந்தது. கடந்த முறை என் ஊருக்கு சென்ற போது பார்த்தேன். ரோட்டில் இருந்த பல பசுமையான மரங்களை காணவில்லை. தஞ்சையை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லுவார்கள். அந்தளவுக்கு விவசாயம் செழித்து வளர்ந்த பகுதி அது. எனது சிறுவயது முதல் பார்த்து வருகிறேன். எப்பொதும் வயல்கள் பச்சை பச்சையேல் என்று தான் காட்சி அளிக்கும்.ஆனால் கடந்த சில ஆண்டாக பருவமழை பொய்த்து வந்ததாலும் காவேரியில் இருந்து தண்ணீர் வரத்து குறைந்ததாலும் பல விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்களாக மாறி இருந்தது. ஆனால் நான் இங்கு கண்ட காட்சி என்னை ஏங்க வைத்தது. இதுவும் ரியல் எஸ்டேட்காரர்கள் கண்ணில் பட்டுவிட கூடாது என்று மனதிற்குள் எண்ணி கொண்டேன்.  இப்படியே பலவித சிந்தனைகள் மனதிற்குள் ஓடியது. அதற்குள் பாலகாடு வந்து சேர்ந்தது. அங்கு இருந்து நண்பரின் ஊரான திருச்சூர் பக்கத்தில் உள்ள மண்ணுத்தி செல்ல வேண்டும். அங்கு நின்ற பஸ்கள் அனைத்திலும் ஊர் பெயர்கள் மலையாளத்தில் எழுதி இருந்ததால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அருகில் இருந்த நண்பரின் உதவியை நாடினேன். அவருக்கு ஓரளவுக்கு தமிழ் தெரிந்திருந்த காரணத்தால் நான் சொல்லுவது அவருக்கு புரிந்தது. அவர் என்னை அழைத்துக்கொண்டு திருச்சூர் பஸ் நிற்கும் இடத்திற்கு சென்றார் அங்கு நின்ற ஒரு பேருந்தின் நடத்துனரிடம் சென்று மலையாளத்தில் ஏதோ ஏதோ கூறி என்னை ஏற்றி விட்டார். பின்னர் நான் அவருக்கு நன்றி கூறிவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்தேன். பேருந்து புறபட்டது.. பேருந்தில் பயணம் செய்யும்போது என் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் சரியான பேருந்தில் ஏறி இருகிறேனா என உறுதிபடுத்த நடத்துனரிடம் அலைபேசியை கொடுக்க சொன்னான் நானும் அவரிடம் கொடுத்தேன் பேசிவிட்டு நான் பார்த்துகொள்கிறேன் என்பது போல தலையை ஆட்டினார். சரியாக ஒன்னரை மணிநேரத்தில் மண்ணுத்தி வந்து சேர்ந்தது. பேருந்தில் இருந்து இறங்கும் போது நடத்துனர் ஒரு துண்டு சீட்டில் மலையாளத்தில் ஏதோ எழுதி கொடுத்தார். இதை இந்த வழியாக வரும் பேருந்தில் காட்டி ஏறுமாறு மலையாளம் கலந்த தமிழில் கூறினார். நானும் சரி என்று தலையை ஆட்டினேன். அங்கு சுற்றி  பார்த்தல் ஏதோ வேற்று தேசத்திற்குள் நுழைந்தது போல இருந்தது. வரும் பேருந்துகளில் பேச்சுக்கு கூட ஆங்கிலம் இல்லை. உடனே என் நண்பனுக்கு அலைபேசியில் அழைத்தேன். அவன் ஆட்டோ பிடித்து அதில் வருமாறு கூறினான். நான் முன்பின் தெரியாத இடத்தில் ஆட்டோ காரரை நம்ப தயாராக இல்லை. எனவே நான் அந்த நிருத்தத்திலே நின்றேன். ஒரு பேருந்து வந்தது படியில் நின்ற அந்த பேருந்து நடத்துனரிடம் மலையாளத்தில் எழுதப்பட்ட துண்டு சீட்டை காட்டினேன். அவர் ஏறி கொள்ளுமாறு சைசையில் கூறினார். நானும் ஏறினேன் இருபது நிமிட பயணத்தில் ஒரு நிறுத்தத்தில் என்னை இறங்க சொன்னார். நானும் இறங்கினேன், பின் நண்பனுக்கு அலைபேசியில் அழைத்தேன் வந்து என்னை அழைத்து சென்றான். நண்பனின் வீடு புதிதாகவும் அழகாகவும் இருந்தது. விசாரித்தேன் தற்போதுதான் நிலம் வாங்கி இந்த வீட்டை கட்டியதாக கூறினான். வீடு மிகவும் அடம்பரமில்லாமல் அடக்கமாக நன்றாக இருந்தது. வீட்டிற்குள் நுழைந்தேன் மிகவும் சுத்தமாக வைத்திருந்தான். இன்று ஞாயிறு அம்மா சர்ச்க்கு போயிருபதாக கூறினான். அவன் ஹோட்டல் நிர்வாகம் பற்றி படித்ததனால் அவனுக்கு நன்றாக சமைக்க தெரியும். ஆகவே எனக்கு உணவு தயார் செய்தான். சிறிது நேரத்தில் உணவு தயாராகிவிட்டது. நாங்கள் இருவரும் சாப்பிட அமர்ந்தோம். காலை உணவாக புட்டு செய்து இருந்தான். கூடவே டீ யும் சூடான வாழைப்பழமும் என் தட்டில் வைத்தான். இது வித்தியாசமான கலவையாக இருந்தது.சரி என்று சாப்பிட்டேன். பின்னர் வழக்கமான விசாரிப்புகள் கல்லூரி நண்பர்களை பற்றி பேசினோம். மதியமும் வித்தியாசமான உணவை அருந்தினேன். மாலை அவனின் அம்மா வந்தார் அவரை பார்த்துவிட்டு கிளம்பினேன். போகும்போது என்னை தன்னுடன் சிங்கப்பூர்க்கு வந்துவிடு மாறும் அங்கு உனக்கு நல்ல வேலை வாங்கி தருவதாக கூறினான். நான் யோசித்து சொல்லுவதாக கூறினேன். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு மீண்டும் வருவதாக கூறினான். என்னுடன் பேருந்து நிலையம் வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தான். இரவு திருப்பூர் வந்து சேர்ந்தேன். இரவு உறங்க செல்லும் முன் எனக்கு எனக்கு இன்று நடந்தவைகளை நினைத்து பார்த்தேன். முதலில் என்னை சரியான பேருந்து ஏற்றி விட்ட அந்த நண்பருக்கும் பேருந்து நடத்துனர்கும் மனதிற்குள் நன்றி கூறினேன். இங்கு யாராவது நம்மிடம் முகவரி கேட்டால் நமது வேலையில் தான் நாம் கண்ணும் கருத்துமாக இருப்போம். இனி நாம் அப்படி இருக்ககூடாது என்று முடிவுஎடுத்தேன். ஏன் மலையாள சகோதர்கள் சாப்பிடும்போது டீயையும் வாழை பழத்தையும் சாப்பிடுகிறார்கள். அடுத்தது ஏன் கேரளம் மட்டும் அப்படியே இன்னும் பசுமையாக இருக்கிறது. அது கடவுளின் தேசம் என்று சொல்கிறார்களே அதனாலாயா? அல்லது கடவுள் அவர்களுக்கு மட்டும் வரம் கொடுத்து இருக்கிறரா? அல்லது அவர்களுக்கு வாய்த்த அரசியல்வதிகளா? இல்லை மக்களின் அக்கறையா தெரியவில்லை. இப்படி எண்ணங்களுடனே தூங்கிவிட்டேன்.

No comments:

Post a Comment